என்னுள் இருக்கும் கவிஞன் - பெரியதோர் கொடுங்கோலன்...!
ஒருபோதும் என்னை அவன் உறங்கவிட்டதில்லை...
சற்றே கண்ணயர்ந்தாலும்,
என் கனவுகளையும் அவன் விட்டு வைத்ததில்லை...
சரி! கனவைப் பார்த்து கவிபாடுகிறானா? எனில்,
அதுவும் இல்லை!
எப்போதோ பேனா எடுக்க,
எப்போழுதும் என்னைப் பாடாய்படுத்துகிறான்!
என்னுள் இருக்கும் கவிஞன் - பிழைக்கத்தெரியாதவன்...!
புறநானூறு படித்து பூரிக்கின்றான்!
'நந்திக்கலம்பகத்தின் நயம் எண்ணே!' என நெகிழ்கிறான்...
பதவி உயர்வுக்காய், நான் படிக்க அமர்ந்தாலும்,
'பாரதியை' காட்டி பல் இளிக்கிறான்!
புத்தகங்களை படிக்கிறானோ இல்லையோ...
புத்தகங்களோடு தினமும் படுக்கிறான்!
என்னுள் இருக்கும் கவிஞனுக்கும், காதலுக்கும் தூரமில்லை!
அவன் பாடும் கவியில்,
பாதி கவி..
பாவையர்தம் காதலைப் பற்றியதே!
நிச்சயமாய் அவன்
காதலித்துக் கொண்டிருக்ககூடும்!
அல்லது
காதலை கடந்திருக்கக்கூடும்!
என்னுள் இருக்கும் கவிஞன் - ஊர் பேச்சைக் கேளாதவன்!
'முள்ளின் பெருமை -
காலால் உதைத்தவனை கையால் எடுக்க வைக்கிறது'
என ஊர் சொன்னால்,
'மனிதனின் பெருந்தன்மை -
குத்திய முல்லை கையில் எடுத்து ரசிக்கிறான்'
என இவன் சொல்வான்!
ஊர் ஒன்று சொன்னால், இவன் வேறு சொல்வான்
சுய புத்தி இருக்க, சொல் புத்தி எதற்கென்பான்!
என்னுள் இருக்கும் கவிஞன் - அறிவற்ற மூடன்!
பணம் ஈட்டி,
பொருள் கூட்டச் சொன்னால்,
கவிபாடி காலங்கழிக்கிறான்!
கலை, கனவு, கற்பனை என
கண்டதெல்லாம் பேசுவான்!
தட்டிக் கேட்டால்,
'என் உலகம் நின்னினும் பெரிது!' என
தத்துவம் பேசுவான்!
என்னுள் இருக்கும் கவிஞன் - தன்னலமான தற்பெருமைக்காரன்!
இல்லையேல்,
தன்னைப் பற்றி
தானே கவிதை புனைந்து,
இங்கே பிரசுவிக்கவும் செய்வானோ?!
அட!
என்னுள் இருக்கும் கவிஞன்
அப்படியே இருக்கிறான்
என்னைப் போல!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)