இதோ!
இன்றைக்கும் சேர்த்து,
எழுநூற்றி முப்பது நாட்களாகிறது!
இரண்டாவது முறையாக,
சூரியனை
நம் காதல் வலம் வந்துவிட்டது!
பிறை, அரை, முக்கால், முழு என
அத்தனை வடிவிலும்
நிலவை கண்டு மகிழ்ந்தாகிவிட்டது!
குழந்தையின் சிரிப்பில் துவங்கி,
குறுஞ்செய்தி வரை,
தூரல், பாடல், கவிதை, கால்தடம் என
ஏறத்தாழ எல்லாமே ரசித்தாகிவிட்டது!
ஓரப் பார்வை!
நேரங் கடந்த பேச்சு!
சண்டை, சிணுங்கள், கொஞ்சல், குலவல்
அழுகை, சிரிப்பு, பிரிவு,தேடல் என
காதலின் அத்தனை ரசங்களும்
கிட்டத்தட்ட அரங்கேறிவிட்டது!
இத்தனைக் கடந்த பின்னும்,
முதல் நொடிபோல்,
இந்த நொடி
எந்தன்
உள்ளமெல்லாம்
உவந்து சிரிப்பதும் ஏனோ?!
அவசரமாய் வீசும் காற்று
பரவசமாய் உணரப்படுவதும் எதனாலோ?
"நாம் ரசித்த அதே நிலா
இன்றைக்கும் ஏன் புதிதாய் தெரிகிறது?"
இது என்ன?
உன்னை நினைக்கும் போதெல்லாம்
கைகளுக்குப் பின்னால்
இரண்டு இறக்கைகள் விரிகின்றன?!
இந்த உதடுகளுக்கு
வந்த திமிரை பார்த்தாயா??
உன் பெயரை அடிக்கடி உச்சரிக்கிறதாம்!
என் பேனாவோ
அதற்கு மேலே!?
உனைப் பற்றி எழுதாத நேரங்களில் எல்லாம்
மௌனவிரதம் தான்!
உனக்கொன்று தெரியுமா?
நெஞ்சில் நீ பூத்த நாள் முதல்
நான் கண்ட பூவெல்லாம்,
எனைக் கண்டு சிரிக்கிறது!
பறவைகளுக்குக் கூட உற்சாகம்தான்!
கூட்டமாய் ஆடிப்பாடி,
குதூகலிக்கிறது!
ஐயோ!!!!
மேல்நோக்கி நேர்க்கோட்டில்,
மூன்று முள்களும்
இணையப் போகின்றன!
மூன்றாம் ஆண்டின்
முதல் கனவில்
உனை ரசிக்க வேண்டாமா?!
இதோ!
விழி மூடி
வழி திறக்கிறேன்!
நம் மூவருக்காய்!
நீ... நான்..... காதல்...!!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இது தூய்மையான, பிற மொழி கலப்பு இல்லாத 'தமிழ் தளம்', எனவே தயை கூர்ந்து தங்கள் கருத்துகளை தமிழில் மட்டும் பதிவு செய்யவும். நன்றி!!!
(குறிப்பு:தமிழில் தட்டச்சு செய்ய வலதுபுரம் உள்ள 'மொழிபெயர்ப்பு பலகையை' பயன்படுத்திக்கொள்ளவும்)